செவ்வாய், 9 டிசம்பர், 2014

என்னைபற்றி



என்னைபற்றி
* கோவை சிங்கையில் பிறந்தவர். வயது 78.
* ஓவியம், பின்னல், தையல் கலைகள், கவிதையென நுண்கலைகளில் இளமை முதல் நாட்டம்.
* ஆசிரியையாகத்தான் வரவேண்டும் என விரும்பி கல்விப்பணியில் நுழைந்து முதன்மை கல்வி அலுவலராக படிப்படியாக உயர்ந்து, ஒவ்வொறு நிலையிலும் மனமாறப்பணியாற்றிய மனநிறைவு.
* பணி ஒய்வு என் கவிதைபயிருக்கு உரமிட்டு மழை பொழிகின்றது.
* அந்தாதிக்கவிதை எழுதுவதில் ஈடுபாடு
* திருவெள்ளறை அமமான் ஸ்ரீ செளம்யநாராயணன் ஆச்சாரியார் முன்னுரை தந்து ஆசிகளுடன் "108 திவ்ய தேசங்கள்", "ஸ்ரீ உலகளந்தபெருமாள் கோவில் வரலாறு", என்ற அந்தாதிக் கவிதைகள் அச்சில் வந்து அரங்கேறியவை.
* பாரதி நுற்றாண்டு விழா காலத்தில் "பாரதி நோக்கில் பெண்மை" என்ற என் உரைநடைநூல் வெளியிடப்பட்டது.
* மறைதிரு குண்றக்குடி அடிகளார் 1993ல் புதுகோட்டையில் முதன்முறையாக மாவட்ட அளவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் எனது வரவேற்பு கவிதையை பாராட்டி "கவிக்குயில்" என பட்டமளித்து கவிபாடும் முதன்மைகல்வி அலுவலர் நம் மாவட்டத்துக்கு அமைந்தமைக்காக நாம் பெருமைபடவேண்டும்". என கூறிய சொற்களும், அந்தநாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய தருணம்.
* எனது வெளிநாடு, உள்நாடு பயணங்களில் கண்ட காட்சிகள், பழகிய மனிதர்கள் நிகழ்வுகள் என யாவற்றையும் கவிதையாக்கி ரசிப்பது என் பொழுதுபோக்கு.
* சமஸ்கிருதத்தில் உள்ளபல கடவுள் ஸ்லோகங்களை தமிழ் கவிதையாக்கியுள்ளேன்.
* விஷ்ணு சகஸ்ரநாமம், கூறும் அனைத்து நாமாக்களையும், அதன் பொருளோடு சுமார் 1008 அந்தாதி கவிதையாக பாடி வைத்துள்ளேன்.
* தினமலர் "ஆன்மீக மலர்" தெய்வீக படங்களுக்கு வாரம்மொரு கவிதை எழுதி 3 தொகுப்புகள் தயாரித்து வைத்துள்ளேன்.
* காவடி சிந்து வகையில் "பக்தி பாடல்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பினை நடன விற்பன்னர் திரு. நரசிம்மாச்சாரி அவர்கள் தனது நடன நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என பாராட்டியது நினைவில் நிற்கும் நிகழ்வு.
* ஏட்டினில் வைத்து நானும் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அறிந்த கவிதைகளை ஆர்வம்மிக்கவரோடு பகிர்ந்து கொள்ளவே இந்த ஆரம்ப முயற்சி.
* உங்களோடு பின்னர் மேலும் பகிர்ந்து கொள்வேன்.

காப்பு



காப்பு
ஓம்எனும் பிரணவத்தின் ஓங்கார வடிவாகி
    ஒடித்த தந்தமதில் ஓர் பாரதம் வடித்திட்ட
    தும்பிக்கை நாயகனே துவக்கத்தின் முதல்வனே
    துளிராகி என் கவிதை தழைத்திடவந்திடுக
     கம்பனுக்கு கால்சலங்கை கலகலவென அசைத்து
            கவிஞனுக்கு துணையாகும் கலைவாணி அறிவரசி
               நம்பிக்கை எனக்கருள நற்கவியில் வந்திடுக
    நயமான தளமதில் நயம்பட விளங்கிடவே!

விளங்கும் மகரசோதி வீற்றிருக்கும் சபரிகிரி
       விண்ணதிரும் சரணமாகி விசுகின்ற மணமாகி
களங்கம் நீக்கியெம் கைபிடித்து ஏற்றிவிடும்
       காந்தமலை பாலகனே கவிதையில் வந்தருள்க
   தளங்களில் தேன்கவி தொடுத்திட புகும்வேளை
                 தமிழாகி மலராகி தாயாகி அன்பாகி
உளம்கனிய கவிமலர் உரைத்திட வழிதருக
    ஊரோர் பார்த்தாலே உளமாற ஓர் நன்றியே!