வியாழன், 29 ஜனவரி, 2015

மாருதியே


      மாருதியே

அறிவின் ஒளியாகி அன்பின் வழியாகி
    அருளின் உருவாகி ஆஞ்சநேயன் வடிவாகி
நெறியின் இடமாகி நெஞ்சே கோவிலாகி
    நாவின் வாக்காகி நாயகன் தோழனாகி
பொறியினை அடக்கி பொலியும் தூதனாகி
    பாரினில் துணையாகி பஜனையில் பூவாகி
தறிகெடும் மானுடத்தை தன்னுள்ளே வைத்து
    தரணியில் காத்திடும் தயாளனே மாருதியே!


                                         ராதாகவி

கந்தா காத்திடுவாய்!

       கந்தா காத்திடுவாய்!

நெருப்பில் பிறந்து நீரினில் கலந்து
   நங்கையர் கைகளில் நளினமாய் வளர்ந்து
மருவி மகிழ்ந்து மாதவள் அணைக்க
   மூவிரு முகமோடு முருகனாகி வந்தவனே
குருவே குகனே குன்றில் குடியேறி
   குறமகள் தன்னோடு குஞ்சரியை மணந்தவனே!
கருவினில் தோன்றி கலங்கிடும் எந்தனை
   கனகவேல் கொண்டு காத்திட வருகவே!

                                         ராதாகவி

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அமர்ந்தவர் யாரோ?



அமர்ந்தவர் யாரோ?
கால் மடித்து குருந்த மரத்தடியினில்
     கண்மூடி அமர்ந்திருந்த குருவான தட்ஷிணாமுர்த்தியா?
கால் தூக்கியாடிய கனகசபை தவிர்த்து
     கால்மேல் காலிட்டு களைப்பாறும் நடராஜனா?
காலாக்கினி தாங்கி காட்டினில் திரிந்ததால்
     கால் வலிக்க கைதாங்கும் காலபைரவனா?
நீலனாய் கங்கையை நீள்சடையில் நிலவினை
     நாகமதை கழுத்தினில் நல்லாரமாய் அணிந்தே
சூலமதைத் தாங்கியே சக்தியை தன்னுடலில்
     சேர்த்திட்ட சோதியா அர்த்தநாரீசுவரனா?
கோலவிழி முக்கண்ணனா? குந்திய நமச்சிவாயமா?
     கோயிலின் லிங்கமா? காத்தருள அமர்ந்தாயோ?

                                            ராதாகவி

வியாழன், 8 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்



பொங்கலோ பொங்கல்

கங்கையும் காவிரியும் கண்ணெதிரே இணையுமா
       களங்களில் தீவிரவாத களபலிகள் ஒயுமா
எங்கும் ஈசலாய் எழுகின்ற இலவசங்கள்
       எம்முள் உழைக்கும் எண்ணத்தையே நீக்கிடுமா
ஒங்கும் அறிவியல் ஒளியுலகை காட்டுமா
       ஒப்பிலாகல்வியும் ஒதுக்காமல் கிடைக்குமா
மங்கலப் பெண்சிசு மானிலத்தில் வளருமா
       மண்ணின் மைந்தனென்ற மயக்கம் தீருமா

செங்கரும்பு புத்தரிசி சோத்துப் பொங்கலிட்டு
     செவ்வாயில் பொங்கலோ பொங்கலென பூரிக்கும்
உங்களுக்கு வாழ்த்து உவந்து நான் கூற
     உள்ளெழும் கனவுகள் உருவாகும் என்றே
தங்கிடும் நம்பிக்கை தருகின்ற எதிர்பார்ப்பு
     தண்ணீர் சூழ்ந்திட்ட தரணியில் நடக்குமா
எங்கும் உணர்வுகள் எழிலாக செயலாகின்
     எல்லோருக்கும் அன்றே எந்தன்
                            பொங்கல் வாழ்த்து
                              ராதா கவி