வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புலர்ந்திடும் கதிரே

புலர்ந்திடும் கதிரே

எண்ணத்தில் விளையாடும் எழில்மிகு கண்ணா
   வண்ணத்தில் மயிலிறகு வளைந்தாடும் குழலா
  கண்களில் காந்தமென கவர்ந்திடும் கண்மணியே
   மண்மீதுஎன் மனதுள்ளே மலர்ந்திட வருவாயே
   புன்னகையில் பொலிவாக புலர்ந்திடும் கதிரே
  புண்பட்ட உள்ளத்தை புனிதமாக்க வருவாயா
 கணந்தோரும் மாறிவரும் காரிருள் நீக்குவாயே
  தண்ணிலவு முகத்தானே தாளடியில் வீழ்ந்தேனே

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விநாயகர்

வீசும் கதிரொளி விளங்கும் கரங்களும்
   பூசிய வயிறும் பழமோடு மோதகமும்
    மாசினை நீக்கிட முன்வரும் துதிக்கையும்
   நேசமிகு பார்வையும் நீங்காத கனிவும்
    வாசமிகு அருகும் வளமான எருக்கும்
        பூசிய திருநீரும் புவிமணக்கும் சந்தணமும்
    கேசமதில் விளங்கும் இளம்பிறை நிலவும்
    தூசாக என்துயர் தீர்த்திட வருமே!

வானளந்த வாமனன்

வானளந்த வாமனன்

  வானளந்தவனை நினைந்திட வாமனன் அருள் பெருகும்
    ஊன்கலந்த உடலில் உள்ளொளி வீசுமே
  ஓணத்தில் பிறந்தவனை ஓர்மூவடி கேட்டவனை
    கண்முன் விரிந்து ககனமெலாம் நிறைந்தவனை
அன்பால் அரக்கனுக்கு ஆழ்கருணை தந்தவனை
   மனதால் துதித்திட மாயமாய் வருவானே
 தானளந்த புனிததீர்த்த திருவடி தருவானே
  மோனத்தின் தவமாகி மோகம் தீர்ப்பானே!

இனிய நவராத்திரியே வருக!

இனிய நவராத்திரியே வருக!

கலையாக மலையாக அலையாக வருவாள்
     கமலத்தின் உதித்தவன் கனிநாவில் இருப்பாள்
    மலைவேந்தன் மேனியில் மறுபாதி ஆகிடுவாள்
         மாதொரு பாகனாகி அவன் மேதினியில் சிறப்பான்
         அலைகடைய அமிர்தமாகி அழகியதிருவாகி எழுவாள்
    அனந்தன் மார்பினில் அமர்ந்திருந்து கனிவாள்
        சிலையாகி கோவில்களில் சிங்காரமாய் பொலிவாள்
     சிந்தனைக்கு எட்டாத செல்வியர் மூவரன்றோ!

அஷ்ட லக்ஷ்மியாய் அனைத்திலும் அவளாவாள்
     ஆயகலை அறுபத்துநான்கும் அவளாகி ஒளிர்வாள்
 துஷ்டரை வேரருக்க தூயசக்தி உருவாகிடுவாள்
     துயர்நீக்க நவசக்தி துர்க்கையாகி தோன்றிடுவாள்
  நிஷ்டையும் நியமமும் நெஞ்சினில் ஏற்றியே
     நற்தூய மனதால் நாளும் துதித்திட
  இஷ்டமாய் முத்தேவியர் இனிதே வந்திருந்து
     இன்பமெலாம் பொழிகின்ற இனிய நவராத்திரியே வருகவே!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

வண்ணமயில் இறகு



வண்ணமயில் இறகு

வண்ணமயில் இறகின் வானவில் கொண்டாட்டம்
      வட்டம்கழிந்த எட்டில்கிட்டன் வரும் கொண்டாட்டம்
           வெண்ணையை கையிலெடுத்து வாய்வைக்கும் கேலியாட்டம்
    வண்ணக்குழல் அமுதம் வாய்தரும் இசையாட்டம்
              கண்ணழகு தருகின்ற கணக்கிலா களியாட்டம்
  காண்பதற்கு ஆயிரம் கண்ணிலாத திண்டாட்டம்
              மண்ணில் ஒடும் மாதவன் தேரோட்டம்
    மண்ணில் பிறவிபெற்ற மானிடர்தம் தவநாட்டமே!

தென்மதுரைத் தேவனே



தென்மதுரைத் தேவனே!

 மதுரையம்பதி மாநகர் மீனாட்சியை மணமுடித்த
    மகேஸ்வரா சுந்தரேசா மகுடத்தில் கங்கைதாங்கி
      மதுமதியை பிறையாக்கி மணிச்சடையில் சூடியவனே
    மங்கை அங்கயற்கண்ணி மலர்கரம் பிடித்தவனே
               மதுரத்தமிழ் மங்கல தென்மதுரை மருமகனே
         மாமதுரை தமிழ்சங்கத்தின் முதல்வனான தலைவனே
   மதுரமொழி உமையவள் மனமகிழும் மாதேஸ்வரா
       மங்கையவள் துணையோடு மங்கலங்கள் தந்தருள்க!

உலகை உண்டவனே



உலகை உண்டவனே!

பத்து அவதாரத்தில் பித்தாக செய்பவன்
          பரமார்த்தனாய் வந்து பாலகனாய் வாழ்ந்தவன்
     முத்தாக ஒளிவீசும் மோகனப் புன்னகையால்
              மூலத்தின் அரும்பொருளை முன்னே காட்டுபவனே
          வித்தாக ஒரிடத்தில் விழுந்தது சிறைச்சாலையில்
          வளர்ந்தது ஒரிடத்தில் வளமான கோகுலத்தில்
  கொத்தான மலர்களும் குழலும் கைகளில்
         கீதை தானுரைக்க கோவிந்தனாய் வந்தவனே!

மத்தால் அடிபடுவாய் மாதுக்கு அபயமாவாய்!
   மண்மேல் தருமம் மங்காதுதங்கச் செய்வாய்!
                சித்து விளையாடி சிந்தையை கவர்ந்தவனே
  சிறுபிள்ளையே என்னைச் சற்றே கண்பாராய்!
                சித்தம் தெளிவடைய சீக்கிரம் வந்தருள்க!
  சித்திரமாய் என்னுள்ளே சீரோடு அமர்ந்திடுக!
                உத்தமனே சரணம் உந்தனுக்கே என்உள்ளம்
  உலகை உண்டவனே உன்பாதம் பணிவேனே!