செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

உலகமகா சோதி


விரிகுழல் விரிந்திருக்க விழியிரண்டு பார்த்திருக்க
   வெறுமையான என்நெஞ்சில் வேரூன்றும் உன்கருணை
பரிதவித்து மனம்நிற்க பாசத்துடன் உட்புகுந்தாய்
     பாரினில் என்குறைகள் பனியாக உருகவைத்தாய்
தரித்திடும் காவியுடை தளர்ந்துவரும் மென்னடை
     தாயாகி நீவந்தாய தவழ்சேயாக நானிருந்தேன்
உரிமையுடன் எந்தனையே உன்னுள்ளே வைத்திட்டேன்
     உலகமகா சோதியே உந்தனையே சரணடைந்தேன்!

புதன், 4 பிப்ரவரி, 2015

பன்னிருவரைப் பணிவேனோ? பக்திவழி அறிவேனோ?

1. ஆழியான் அடியினுக்கு அகிலத்தை அகலாக்கி
     ஆதவனை சுடராக்கி அடிபணிந்த பொய்கையார்
  ஊழியானை உத்தமனை உருதுன்பம் நீங்கவேண்டி
     ஒளியூட்டிய ஒர்விளக்கில் ஒருதுளி எண்ணை ஆவேனோ?

2. பொழிகின்ற கருணை பொன்மலர் கண்ணனின்
    பொருந்திய திருவுருவை புறக்கண்ணாலும் கண்டே
  ஆழியேந்திய அமலனை அழகனைக் காட்டிய
    அமுதான பேயாழ்வார் அசையும் இமைமுடி ஆவேனோ?

3. அன்பும் ஆர்வமும் அழகு விளக்காக
     அறிவான சிந்தனயும் அங்கெரியும் திரியாக
  இன்பமே இவ்வுலகில் இங்கென்றும் நிலைபெற
     இதயத்தில் அரங்கனை இசையோடு கூட்டுவித்த

4. தன்லைமிலா பூதத்தாழ்வார் தனிவழி காட்டிட
    தஞ்சமென அமர்ந்த திருப்பாதமண் ஆவேனோ?
  முன்வந்த மூவாழ்வார் முடங்கிய அறையினில்
    மூச்சாக சுவாசித்த மென்காற்று ஆவேனோ?

5. நான்முகன் அந்தாதியில் நாராயணனே தெய்வமென
    நானிலத்தில் உள்ளதெல்லாம் நாரணன் வடிவமென
  தான்உணர்ந்த பொருளை தமிழால் எடுத்தோதிய
    திருமழிசை ஆழ்வார்வாழ் தெருமண் ஆவேனோ?

6. உயர்நலம் உடையவனை உளனெனில் உள்ளவனை
    உயர்குன்றம் நின்றவனை உறிவெண்ணை உண்டவனை
  புயல்மழை வண்ணனை புளியமரத் தடியிருந்தே
    பக்தியில் பாடியே புகுகின்ற வைகுந்தம்

7. தயவான நம்மாழ்வார் துணையாலே புகுவோரின
    தாளினை முனிவர்கள் தடவிக்கழுவிய நீர்த்துளி ஆவேனோ?
  கயல்விழி மங்கையர் கரங்களில் ஆரத்தி
    காட்டி எடுத்திடும் கரும்சிவப்புதுளி ஆவேனோ?

8. திருமலை மீதினில் திகமும் ஏதாகினுமாய்
    தோன்றிட வேண்டியே திருவேங்கடனைப் பாடிய
  அரசும் வேண்டாத அருள்மிகு குலசேகராழ்வார்
    அளித்திட்ட ராமகாதை அன்போடு கேட்கும் செவி ஆவேனோ?

9. கோடிமலர் பறித்து கோர்த்த(வாச) மாலையுடன்
    கோவலனைத் தாலாட்டி கொண்டாடிய பெரியாழ்வார்
  செடியருகே கிடைத்த செல்வியின் துணையோடு
    ஸ்ரீரங்கம் நடந்திட்ட சிறுபாதைகல் ஆவேனோ?

10. அரங்கனை ஆழிநீலனை அறிதுயிலானை திருப்பள்ளிஎழப்பாடி
     அருளோடு அவனையே அருட்பெரும் தெய்வமென
   சரங்களால் மலர்மாலை சூட்டிடும் தொண்டரடிப்பொடி
     சுகந்தமெனக் கொய்த துளபத்தில் ஒர்இலை ஆவேனோ?

11. பாதாதி கேசம் பரவசத்துடன் கண்டே
     பண்ணோடு யாழிசைத்து பரமனைப் பாடிய
   மூதாதையரும் பின்வரும் முன்னூறு தலைமுறையும்
     முக்திபெற வழிவகுத்த திருப்பாணாழ்வார் யாழில்
                               ஒர்இழை ஆவேனோ?

12. தேடிப் பொருளினை திருடியும் கொணர்ந்த
     திருமங்கை மன்னன் தினமும்தன் துணையோடு
   நாடி அளித்த நல்லமுதும் நற்பணியும்கூட
     நாராயணனைப் பாடியனற்பாயிரத்தில் ஒர்எழுத்து ஆவேனோ?

13. வேதம் தமிழ்செய்த வண்குருஉர் நம்பியே
     வணங்கும் தெய்வமென வாயால் பாடிஎங்கும்
   ஒதிய மதுரகவியாழ்வார் ஒர்பத்துப் பாடலில்
     ஒளிறும் சிறுத்தாம்பில் ஒருதுரும்பு ஆவேனோ?

14. கூடிவந்த தோழியரோடு குளிர்நீரில் நீராடி
     கனவில் கைபிடித்த கண்ணனையே நினைந்து
   பாடிய பாடலால் பரமனடி சேர்ந்த
     பாவை ஆண்டாள் பாதத்துளி ஆவேனோ?

15. நாலாயிரம் பாடியே நற்றமிழ் வளர்த்து
     நாடும் ஆன்மீகம் நாடெங்கும் பெருகிட
   மாலாயிரம் வடிவானவனை மனத்தில் இருத்தியவரை
     மூநான்கு ஆழ்வாரை முக்காலமும் பணிவேனோ?

16. பாலாயிரம் அலைவீசும் பாற்கடலில் இருப்போனை
     பக்தியால் அவர்தந்த பாடல்வழி காண்பேனோ?
   நூலாயிரம் படித்து நொந்துநான் வாடாமல்
     நாராயணன் பாதத்தில் நற்கதி அடைவேனோ?


                                      ராதாகவி  

தைப்பூச நாயகனே!

ஊசலாடும் என்மனதை உள்ளே திருப்பி
   உந்தன் திருப்பாத உயர்வினைக் காட்டி
  வாசமுடன் வளமும் வகையான இன்பமும்
            வெறுப்பும் பகைமையும் விளைவித்த செயல்களும்
   நேசமுடன் நாடிநாளும் நலிந்துபோன எனக்கே
  நீங்காத இன்பத்தை நீயாக வந்தளித்து
பூசத்தின் நாயகனே புவியில் எந்தனையும்
                 புனிதமாக்கி வைப்பாயே (அறு) படைவீட்டு பெருமானே!

    ராதாகவி

வியாழன், 29 ஜனவரி, 2015

மாருதியே


      மாருதியே

அறிவின் ஒளியாகி அன்பின் வழியாகி
    அருளின் உருவாகி ஆஞ்சநேயன் வடிவாகி
நெறியின் இடமாகி நெஞ்சே கோவிலாகி
    நாவின் வாக்காகி நாயகன் தோழனாகி
பொறியினை அடக்கி பொலியும் தூதனாகி
    பாரினில் துணையாகி பஜனையில் பூவாகி
தறிகெடும் மானுடத்தை தன்னுள்ளே வைத்து
    தரணியில் காத்திடும் தயாளனே மாருதியே!


                                         ராதாகவி

கந்தா காத்திடுவாய்!

       கந்தா காத்திடுவாய்!

நெருப்பில் பிறந்து நீரினில் கலந்து
   நங்கையர் கைகளில் நளினமாய் வளர்ந்து
மருவி மகிழ்ந்து மாதவள் அணைக்க
   மூவிரு முகமோடு முருகனாகி வந்தவனே
குருவே குகனே குன்றில் குடியேறி
   குறமகள் தன்னோடு குஞ்சரியை மணந்தவனே!
கருவினில் தோன்றி கலங்கிடும் எந்தனை
   கனகவேல் கொண்டு காத்திட வருகவே!

                                         ராதாகவி

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அமர்ந்தவர் யாரோ?



அமர்ந்தவர் யாரோ?
கால் மடித்து குருந்த மரத்தடியினில்
     கண்மூடி அமர்ந்திருந்த குருவான தட்ஷிணாமுர்த்தியா?
கால் தூக்கியாடிய கனகசபை தவிர்த்து
     கால்மேல் காலிட்டு களைப்பாறும் நடராஜனா?
காலாக்கினி தாங்கி காட்டினில் திரிந்ததால்
     கால் வலிக்க கைதாங்கும் காலபைரவனா?
நீலனாய் கங்கையை நீள்சடையில் நிலவினை
     நாகமதை கழுத்தினில் நல்லாரமாய் அணிந்தே
சூலமதைத் தாங்கியே சக்தியை தன்னுடலில்
     சேர்த்திட்ட சோதியா அர்த்தநாரீசுவரனா?
கோலவிழி முக்கண்ணனா? குந்திய நமச்சிவாயமா?
     கோயிலின் லிங்கமா? காத்தருள அமர்ந்தாயோ?

                                            ராதாகவி

வியாழன், 8 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்



பொங்கலோ பொங்கல்

கங்கையும் காவிரியும் கண்ணெதிரே இணையுமா
       களங்களில் தீவிரவாத களபலிகள் ஒயுமா
எங்கும் ஈசலாய் எழுகின்ற இலவசங்கள்
       எம்முள் உழைக்கும் எண்ணத்தையே நீக்கிடுமா
ஒங்கும் அறிவியல் ஒளியுலகை காட்டுமா
       ஒப்பிலாகல்வியும் ஒதுக்காமல் கிடைக்குமா
மங்கலப் பெண்சிசு மானிலத்தில் வளருமா
       மண்ணின் மைந்தனென்ற மயக்கம் தீருமா

செங்கரும்பு புத்தரிசி சோத்துப் பொங்கலிட்டு
     செவ்வாயில் பொங்கலோ பொங்கலென பூரிக்கும்
உங்களுக்கு வாழ்த்து உவந்து நான் கூற
     உள்ளெழும் கனவுகள் உருவாகும் என்றே
தங்கிடும் நம்பிக்கை தருகின்ற எதிர்பார்ப்பு
     தண்ணீர் சூழ்ந்திட்ட தரணியில் நடக்குமா
எங்கும் உணர்வுகள் எழிலாக செயலாகின்
     எல்லோருக்கும் அன்றே எந்தன்
                            பொங்கல் வாழ்த்து
                              ராதா கவி