கொஞ்சும் மொழி குமரனுக்கு மூத்தவனே
கொண்டாடும் சாஸ்தாவுக்கு முன்நிறை கணபதியே
நஞ்சுண்ட நீலகண்டனின் திருமகனே
நயனவிழி உமையவள் உளம்மகிழ் பிள்ளையே
பஞ்சணையாய் பாம்பனையில் துயில் பரந்தாமனின்
பாசமிகு மருகனே பஞ்சமுகத்தோனே
தஞ்சமென வருவோர்க்கு ஈரைந்து கரங்களில்
தாங்கிடும் சூலம்வேல் தகதகக்கும் கத்திகலசம்
விஞ்சும் கதை கட்கம் விளங்கும் செந்தாமரை
விரும்பும் மோதகம் விரல் உடைத்த தந்தமும் கொண்டு
அஞ்சேல் எனக்கூறி அபயம்தந்து காத்திடுவாய்
அறிவும் ஆயுளும் ஆரோக்யமும் அளவிலா செல்வமும்
நெஞ்சினில் அன்பும் நீங்காத பக்தியும் தந்தே
நாடும் இடமெலாம் நிறைந்து எமக்கு அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக