புதன், 29 ஏப்ரல், 2015

சீறி வந்த சிங்கமே!



சங்கு சக்கரம்இன்றி செரிவான கூர்நகங்கள்
  சிலிர்க்கும் ஆயுதமாய் சீறிவந்த சிங்கமே
தங்கும் மனிதனும் தளராத மிருகமும் இணைந்த
  தசாவதாரத்தின் தலைமையென தரணியில் வந்தவனே
பொங்கி எழுந்து பெருந்தூணில் மறைந்திருந்து
  பாலகனின் நம்பிக்கைக்கு புத்துயிர்தர பிளந்துவந்து
ஒங்கிய தீமையை ஒருகணத்தில் ஒழித்து
  ஒளியான கருணையை உலகுக்கு காட்டிநின்ற

மங்கல தெய்வமே மகாலட்சுமி மணாளனே
  மறுபடியும் நீவந்து மாபூமியில் முளைத்திடும்
எங்கும் பரவிநிற்கும் எண்ணற்ற தீமையழிக்க
  எல்லோரும் பிரகலாதனாய் ஏங்கியே அழைக்கிறோம்
ஒங்காரத் திருவுருவே ஒப்பிலா பேரழகே
  ஒடிநீவர கூடிநின்று ஒன்றாக வேண்டுவமே
தங்கத்தேவி தன்னோடு தாழ்த்தாது வருவாயே
  துயர்சூழ் உலகினை தாயாகி காப்பாயே!


ஆன்மிக மலர் அட்டைபட கவிதை
ஏப்ரல் 28 நரசிம்மர் படம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

ஜெய ஜெய சங்கர



காலடியில் அவதரித்து கால்களால் எண்திக்கும்
  கணமும் அயர்வின்றி காலமெலாம் சுற்றிவந்து
கோலமிகு நான்மறைகள் குறைவின்றி கற்றுணர்ந்து
  கேள்வியும் விளக்கமுமாய் அறிவின் வேள்வியாகி
பாலசந்யாசி உமக்கு பாசமுடன்தந்த நெல்லிக்கனி
  பொன்மழையாய் பொழிந்திட கனகதாரா ஸ்துதிபாடி
சீலமிகு அன்னைக்கு சிதைமூட்டி சொல்காத்து
  சீர்தூக்கி உலகில்பக்தி சித்தாந்தம் தழைத்திட
பலநூறு நூல்கள் பாமரருக்கும் தந்து
  புலமைக்கு வித்தாக புவிவந்த வித்தகனே!

எங்கும் தெய்வநெறி எழிலாக மணம்வீச
  எழுப்பிய சங்கரபீடம் என்றென்றும் ஒளிவீச
தங்கும் பிறப்பில் தாழ்வுஏற்றம் இல்லையென
  தாய்போல் அனைவரையும் தன்கையால் அணைத்து
ஒங்கும் வாழ்வினுக்கு ஒப்பிலா உயர் நெறிகாட்டி
  ஒங்கார சிவம் ஒளிந்திருப்பான் அன்பில்என
பொங்கும் உலகுக்கு புதுவழி வகுத்தவரே
  புனிதமான கங்கையில் புனிதமாகி சென்றவரே
நீங்காது நிற்காதுஒடும் நதியாகி எமக்கு
  நல்வழி காட்டும் உம் நற்பாதம் பணிவோமே!

ஸ்ரீ சாயி பிரசாதம்



புட்டப்பர்த்தி தன்னில் பிறந்த புதுமலரே
  பூவுலகு வாழவந்த பொன் மழையே
தட்டிஎழுப்பி தவம் காட்டிய இறைத்தவமே
  தாய்பசுவென அன்பை தானாகப் பொழியும்தாயே
மட்டிலா மகிழ்ச்சி மனதின் உள்ளே என்றே
  மாந்தருக்கு புகட்டிய மாபெரும் ஞானியே
கூட்டி வைத்து கோடான கோடிபேரை ஒரு
  குடும்பமென கொள்கைதந்த குணக்குன்றே

வட்டமிட்டு பூமியெங்கும் வாழ்வளித்த சத்யசாயி
  வானுலகு நீசென்றாலும் வந்தெமைக் காக்கின்றாய்
சுட்டும் இடமெல்லாம் சுந்தரப் புன்னகை
  சுடர்விடும் கருணை சொட்டுகின்ற கண்கள்
விட்டுவிட்டு நான்நினைக்க விடாதுஎனைத் தொடர்வாய்
  வாழ்கின்ற தெய்வமே வாழ்வியல் தத்துவமே
கூட்டுக் குஞ்சுகள்யாம் கூவியுனை அழைப்போம்
  கால்களால் நடந்துவந்து கைகளால் எமைக்காப்பாய்
தொட்டு உன்விரல்என் தலைமீது படரும்
  தூயவனே உன்அன்பின் தாக்கத்தை நான் அறிவேனே!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Thanks



This is my 101st post since i opened my Blog "radhatamilkavi" in dec 2014. all the poems are on pictures of deities printed on the cover of "anmigamalar/Dinamalar (weekly) for the past 3 years.

My special thanks to Mrs. vasupradha and amirdha for opening this Blog for me and my grand son G.S.Siddarth for doing the tamil typing of all my kavithai. it is my future endevour to bring out my 'kavithai' in print form.

My thanks to all who took time to read them your appreciation comments and suggestions will be of great help for me to continue my literary persuit with the blessing of hard iyappa

                                                                         Radhakavi

அட்சய திரிதியை



வளரும் குறையாது வளமிகு அட்சயாஎனில்
  வளர்பிறை திரிதியை வாரிவழங்கும் நன்னாள்
வளரும் அட்சயதிரிதியை வாங்கி வழங்கி மகிழும்நாள்
  வலம்புரி கணபதி மாபாரதம் எழுதியநாள்
களம்புகும் பலராமன் கண்ணனோடு அவதரித்தநாள்
  கணத்தில் குபேரன் செல்வஅதிபதி ஆனதிருநாள்
துளபமாலை கண்ணன் துளிஅவல்உண்டு அட்சயஎன
  துன்பம்நீங்கி குசேலன் தொடர்செல்வம் பெற்றநாள்

களபம்விரி திரெளபதிக்கு கானகத்தில் அட்சயபாத்திரம்
  கண்னனால் பெருகிமுனி கடும்பசி நீக்கியநாள்
விளங்கும் நற்செயல் வீரியமுடன் செயல்படும்
  விதைக்கின்ற நல்விதைகள் விருட்சமாகி பலன்தரும்
களங்கமிலா வாழ்வு கண்ணெதிரே கைகொடுக்கும்
  கனிவான இன்சொல் கருத்துக்களை மாற்றும்
உளமாற தானம்செய் உன்னால் முடிந்ததை
  உன்னத அட்சயதிரிதியை உயர்த்திடும் உம்செயலையே!

திங்கள், 20 ஏப்ரல், 2015

நூறாவது கவிதை - நன்றி



நன்றிஒன்று நான்செல்வேன் நானறிந்த கவிதையினை
  நயந்து படித்து நன்பொழியால் பாராட்டிய
என்னருமை நண்பர்கள் ஏற்றமிகு உறவினர்கள்
  எனக்காக ஒர்பகுதி எழிலாக துவக்கிய
சின்னவள் வசுமதி அமிர்தாவுக்கு சிறப்பான நன்றி
  சலிக்காமல் தட்டச்சில் சரசரவெனத் தட்டி
கண்மூடி திறக்குமுன் முகநூல் கவிமுகத்தில்
  கருத்தோடு பதிவேற்றிய கண்மணி சித்தார்த்துக்கு ஒர்நன்றி

ஆன்மீகமலர் முகப்பில் அணிசெய்த கடவுளர்க்கு
  அலங்கார கவிதையால் அணிவித்துப் பார்க்க
அன்பின் மிகுதியால் ஆண்டுகள் மூன்றில்
  அழகாய் சேர்த்தவை அளித்துப் பகிர்ந்தேன்
இன்றுபதிவு செய்தேன் இனியநூறாவது கவிதை
  இனிதே தொடர்ந்திட இணைகிறேன் உம்மோடு
என்றும் உம்சொற்கள் எந்தனுக்கு ஊக்கம்
  என்றென்றும் நன்றி! எல்லோருக்கும் நன்றி!!

                                         ராதாகவி

திருவில்லிநகர் திருப்பாவை



திருவல்லி நகர் வளர்ந்த தெய்வமகளே
  திருமாலை வேண்டி நோன்பிருந்த தவமே
மருவிலா மாலையைத் தான்சூடி மகிழ்ந்த கொடியே
  மார்கழிப் பாவைதந்த முழுமதிச் சுடரே
திருமணத்தை கனவில்கண்டு முடித்த கண்மணியே
  திருமகளே ஆழ்வார் தேடிஎடுத்த மகளே
பெருமையை பெண்மைக்கு பாடிவைத்த மலரே
  பாவைபாடி பதம்பணிவோம் என்றும் யாமே!

வருவான் கண்ணன்!



மயிலிறகு முன்தலையில் மகுடமென விளங்க
  முத்துசரம் முகமதனை முத்தமிட்டு மகிழ்ந்திட
ஒயிலான குண்டலங்கள் ஒளிவீசி காதிலாட
  ஒய்யார குழல்கற்றை ஒளிந்துபின் விளையாட
குயிலாகி கீதமிசைக்கும் குழலும் கையிலாட
  கொத்தான முத்தணிகள் கொஞ்சி அசைந்தாட
கயல்விழிகள் கனிந்தாட கனிமுகம் விரிந்தாட
  கண்ணனே வந்தருள்க கடைக்கண் தந்தருள்க!

உமாபதி



இமயத்தில் குடிகொண்டு இளம் பிறைசூடி
  இனிய கங்கைதனை இருட்சடையில் தாங்கி
இமவான் மகளாம் இன்முக உமையை
  இடப்பக்கம் இருத்தி இயங்கும் ஈஸ்வரனே
கமகமென முழங்கும் உடுக்கையும் பகைகண்டு
  கனன்று சீறும் நாகமும் கையில் திரிசூலமுடன்
பூமகள் பாரம்தீர 'அழித்தல்' தொழிலதிபதியே
  பூமிதனில் எம்பாவம் நீக்கும் பிரதோஷ நாயகனே பணிந்தேன்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பொன்மகளே!



இருகையில் ஏந்திய இனியசெந் தாமரைகள்
  இடக்கரத்தில் பொற்காசு குவளையும் மின்னிட
திருவான வலக்கரமதில் திகழ்கின்ற பொற்கலசமும்
  தகதகக்க தண்ணீராய் தங்கம் வழிந்தோட
மருவிலா கழுத்தினில் மணிப்பொன் ஆரம்அசைய
  மஞ்சுவிரி கூந்தலில் மகுடம் ஒளிவீச
உருவாகி வந்துதித்த உன்னதச் செல்வியே
  உள்ளமதில் தங்கிநின்று உயர்வனைத்தும் அருள்வாயே!

உமா சந்திரசேகரனே!



நந்தி முன்னிருக்க நாற்கரங்கள் மான்மழுவோடு
  நாதம் ஒலிக்கும் உடுக்கையும் நற்தணலும் ஏந்திட
சுந்தரமாய் கால்மடித்து சுகமாக வீற்றிருக்கும்
  சந்திர சேகரனே சந்திரப் பிறைசூடி
முந்திடும் மூவிழிமூடி முடிதனில் கங்கைதாங்கி
  மலையவள் முகம்தேடி மாநிலம் உய்விக்க
சந்தமோடு ஆடவல்ல சக்திஉமா அருகிருக்க
  சிவமாகி என்னுள்ளே சிங்காரமாய் எழுந்தருள்க!

பள்ளிகொண்ட அரங்கன்



கொள்ளிடமும் காவிரியும் கோதையவள் சூட்டிய
  குளிர்மாலையென இருதோளில் அசைந்தோட
பள்ளிகொண்ட பெருமானாய் பாம்பனை மீதினில்
  பார்வையெலாம் தென்னிலங்கை திக்குநோக்க
அள்ளித்தரும் அபயகரம் அழகியசென்னி தாங்க
  அலங்கார ரங்கனாய் ஆட்கொள்ளும் பெருமானே
வெள்ளிமலரென விழிமலர்ந்து கள்ளத்துயில் களைந்து
  விரும்பி சரண்புகும் எம்மை காக்க எழுவாயே!

கணபதி



ஏகதந்தம் எழுத்தாணியாகி முன்வர
  ஏந்திய கைகளில் கொழுக்கட்டை மணம்வீச
முகமோடு இழைகின்ற துதிக்கை
  மூலப் பிரணவமாய் வடிவுகாட்ட
வேகமாய் வீசுகின்ற விசிறியென காதசைய
  வேழமுகம் முன்வந்து விளையாட
மோகம் களைந்து முக்திதரும் கணபதியே
  முக்காலமும் உன்பாதம் நான் சரணே!

பூரத்தின் மலர்கொடி



கோடிமலர் மாலைதனை கோவிந்தனுக்கு சூட்டியே
  கோதையாகி மாதவனை கைபிடித்த நாயகியே
பாடிப்பல் பாவையோடு பண்பான நோன்பிருந்து
  பாமரர்கள் உயர்வெய்த பாதைகாட்டி நின்றவளே
ஆடிமாத பூரத்தில் அவதரித்த பூங்கிளியே
  ஆண்டாளாகி அவனியில் அரங்கனை ஆண்டவளே
சூடியநல் சுடர்கொடியே சூழ்ந்து பணிகின்றோம்
  சொல்மாலை சூட்டியவளே செகத்தினில் அருள்வாயே!

சனி, 18 ஏப்ரல், 2015

உலகம் அளந்தார்! உள்ளம் அளக்கிறார்!



சிறுகுடை தாங்கி சிற்றுருவம்தான் கொண்டு
  சிறுகால்கள் துள்ளிவர சிறுகுடுமி ஆடிவர
சிறுவனாய் வந்த செந்தூர வாமனனே
  சிறுவாய் திறந்து சிறுமழலை மொழியில்
சிறிதான பரிசாக சிற்றடியில் மூவடிதருக
  சிரித்தபடி கேட்க செங்கோல் முடியரசன்
சிறிதென நினைத்து சிந்தைமகிழ தந்தேன்என
  சிலிர்த்து எழுந்து செவ்வானம் தொடுகின்ற

திரிவிக்ரமனாய் உயர்ந்து தோன்றிய உத்தமனே
  தரணியை ஒரடியாய் திகழ்வானம் மறுவடியாய்
விரிந்தெழுந்து அளந்தவனே வேண்டிய மூவடிக்கு
  விருப்புடன் தலைமுடியை வணங்கிப் பணிந்திட
பறித்துஅகந்தை போக்கி பக்தியை தந்தருளி
  பாயும்ஒளி திருவோண பூக்கோலமதில் வருவோனே
பாரினில் எம்முடைய பாசங்களை அளந்தே
  பக்தியை எம்முள்ளே பாங்குடன் வைப்பாயே!

ஸ்ரீ சத்ய நாராயணா!



எழுதலை நாகம் எழுந்துபின் குடையாக
  எகிரும் திகிரி கையில் எழிலாக சுழன்றிட
முழங்கும் சங்கம் முத்தாக ஒளிவீச
  முந்திடும் அபயகரம் முன்வந்து காத்திட
தழலென திண்கதை தண்டம் கைபிடிக்க
  துவளும் மாலைகள் துலங்கும் மார்பினில்
அழகான அணிகலன் அடுக்காய் அசைந்திட
  அலைகடல் கூந்தல்மேல் அலங்கார மணிமகுடம்

விளங்கும் மயிலிறகு விரிநெற்றித் திலகம்
  வெண்ணிலவு முகமும் விழியில் கருணையும்
பழவிணை நீக்கி பக்தனை ஏற்றிட
  பாசமுடன் வருகின்ற சத்ய நாராயணா!
பழமோடு பூக்களும் பல்வகை படையலும்
  பாதத்தில் வைத்து பூஜித்து தொழுவார்க்கு
மழலைச் செல்வம் மனமகிழ்ந்து அருளும்
  மாதவா சத்ய நாராயணா போற்றி! போற்றி!! 

கணநாயகனே!



கண்ணேறு நீங்கிட கண்முன்னே வைத்தேன்
  காணுமிடம் எங்கும் கணபதியே நீஇருக்க
கண்ணேறு தான்படுமோ கவின்வளம் நீங்கிடுமோ
  கண்மூன்று கொண்டு கண்இமையாது விழித்திருக்க
எண்ணம் தீதாகிடுமோ? எண்ணிலா தெய்வங்கள்
  ஏந்திய ஆயுதங்கள் எண்கரங்களில் ஒளிவீச
வண்ணத் தாமரைமேல் வளர்சிம்ம வாகனமுடன்
  வருகின்ற விநாயகனே வணங்குகிறேன் மலரடியே!

கார்த்திகை தீபம்



தீபம் ஒன்றேற்றி அத்தீபம் ஐந்தாக்கி
தீபாரதனை மீண்டும் ஐந்தினை ஒன்றாக்கி
தீபம் ஒன்றினை உன்முன் வைத்துபின்
தீபம் மாலை திருமலை ஏறும்

தீபம் மகாதீபம் மாலை மலையில்எழும்
தீபம் அகண்டதீபம் கார்த்திகையில் ஒளிவீசும்
தீபம் ஏகனாகி தீபமே அநேகனாகி
தீபம் அநேகமே தீபம் ஏகனாகும்

தீபச்சோதி வடிவானாய் திருஅண்ணா மலையானே
தீபசக்தி ஒன்றாகிய அர்த்த நாரீஸ்வரனே
தீபவிழா கண்டேன் கார்த்திகை திருநாளில்
தீபமென ஒளிவீச தூயவனே அருள்வாயே!

பஞ்ச நிருத்யம்



விந்தை உயிர்களை விரும்பி படைத்தல்
  வேராக நின்று வழிவழி காத்தல்
பந்தம் நீக்கி பற்றினை அழித்தல்
  பாங்குடன் தீய பழவிணை மறைத்தல்
எந்தநேரமும் எதிர்வந்து எளிதாக காத்தல்
  எனஐந்திணை இடையறாது நடத்தும்சக்தி
சிந்தைக்கு விருந்தாக சிங்கார ஆடல்வழி
  சிலையாகி ஆடுகின்ற சிவமே போற்றி

இயக்க காளிகா இனிய தாண்டவம் (படைத்தல்)
  இனிக்கும் திருநெல்வேலி இளம்சிவப்பு தாமிரசபையில்
வியக்கும் கெளரி விநயமிகு தாண்டவம் (காத்தல்)
  விரும்பும் திருப்பத்தூர் வியக்கும் சிற்சபையில்
மயக்கம் நீக்கிடும் மாலைசந்தியா தாண்டவம் (அழித்தல்)
  மாமதுரை நகரின் வெள்ளியம்பல திருச்சபையில்
தயக்கமின்றி ஆடுகின்ற திரிபுர தாண்டவம் (மறைத்தல்)
  தண்ணருவி சூழ்குற்றாலம் திகழ்கின்ற சித்திரசபையில்

உயிர்களுக்காக ஒங்கார ஊர்த்தவ தாண்டவம் (அருளல்)
  உயர் ஆலங்காடு ஒளிரும் ரத்தினசபையில்
பயிர்வளர் பார்மீது பொழிகின்ற வானமுதாய்
  பஞ்சநடனம் இணைக்கின்ற பரமானந்த தாண்டவம்
அயர்வின்றி அகிலம்வாழ அழகுதில்லை கனகசபையில்
  அரனே அன்பே ஆனந்த சிவமே
துயர்நீக்கி தூய்மையாக்கி தூக்கிநிறுத்தும் பரம்பொருளே
  தொழுவேன் உந்தன்இரு திருவடியே சரண்புகுந்தேன்!

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பஞ்சமுக விநாயகர்



பஞ்ச முகங்கள் பரிதியெனத் துலங்க
  பூசிய திருநீரும் சந்தணமும் விளங்கும்
குஞ்சரமே பத்துக் கரங்கள் அருளும்
  குழைந்து ஒம் வடிவாகும் தும்பிக்கையானே
மூஞ்சூறு வாகனனே மோதகம் விழைவோனே
  மறைபொருளே முதன்மைத் தெய்வமே
தஞ்சம்என என்றும் உன்திருத்

  தங்கப்பாதம் சரணடைந்தேன் அருள்வாயே!

பாற்கடல் நாயகன்



ஐந்தலை நாகம்தான் அலைகடலில்
  அடுக்கிய அரவணையில் வீற்றிருப்பாய்
செந்தாமரை கரங்களால் சேவடி பிடித்திடும்
  செந்தூர வடிவான ஸ்ரீதேவியுடன்
சிந்தை கனிய சேவிக்கும் கருடனுடன்
  சுதர்சனமோடு சங்கமும் இணந்த கரங்களோடு
உந்தியில் எமும் உலகாக்கும் பிரம்மனோடு

  உளமகிழ்ந்து எமைகாக்க எழுந்தருளே!

நடராஜர்



நடமாடும் ராஜனே நற்கையில் அக்னி
  நாடும் ஞானத்தின் நற்குறியீடு அன்றோ
உடனிருந்தே உள்ளே உயர்கின்ற ஞானத்தீ
  உனக்கே காட்டிடும் உயர்ந்தவன் தரிசனம்
கடவுள் தொழிலாம் ஆக்கல் காத்தல் அழித்தல்
  கனிகின்ற அவன்கை தீச்சுடர் காட்டும் அழிவை
மூட அறியாமைக் காட்டை முன்னின்று சுடும்
  முன்னே எரிகின்ற கற்பூரம் மொழிகின்ற சாட்சி
நடமாடும் பெருமானே நமக்கே உறுதிதந்து
  நம்பியவரை நான் நாளும் காப்பேன் என்று
சுடர்விடும் நெருப்பு சத்தியம் செப்பும்
  சன்னதியின் வாக்குறுதி இனி என்ன வேண்டுமோ
நடமிடும் பாதங்கள் நானிலத்தின் மகிழ்வை

  நாடகமாக்கிடும் ஆனந்தநடனம் நமக்கே காட்டிடுமே!

கோலமயில் முருகா



கோலமயிலும் கையினில் வேலும்
  குன்றமதில் நின்றும் குங்கும சந்தணமும்
பால் வெண்நீறும் பிள்ளை முகமும்
  பிரணவத்தின் 'ஒம்' உடன் பக்தனுக்கு அபயமும்
பொலியும் உத்திராட்சமும் புரியும் புன்னகையும்
  பரமகுருவாகி பழனிவாழ் பாலகனே
சீலமும் நற்சிந்தனையும் சித்திக்க வரமருள்

  சூரனை வென்றவனே சீக்கிரம் என்னை ஆட்கொள்வாயே!

அண்ணாமலை சோதியே



சோதியாகி நின்ற சுடரே பிழம்பே
பாதிமதியும் கங்கையும் பூண்டத் திருச்சடையே
ஆதிசேட விஷ்ணுவும் ஆதியான பிரம்மாவும்
வீதிவலம் காணஅக்னி வடிவமான அண்ணாமலையானே!
ஆதிசக்தியை தன்னுள்ஏற்ற அர்த்த நாரீஸ்வரனே
சதிதேவி உண்ணாமுலை சமேதனே சரணம்
மோதி எழுந்ததீ திருவண்ணா மலையாக

ஒதிடும் நமச்சிவாய ஒங்காரமே சரணம் சரணமே!

வியாழன், 16 ஏப்ரல், 2015

மார்கழி மாதவா!



மார்கழி மாதமாகி மாதவப் பெருமாளாகி
  மைநாகம் ஐந்தாகி மேலே குடையாக
ஆர்பரிக்கும் பாற்கடல் அலைமேல் வீற்றிருப்பாய்
  அழகிய சங்கம் அதிரும் சக்கரம்
போர்புகும் கதை பொற்கையில் பொலிந்திட
  பக்தரை காத்திட பல்உரு ஏற்றிருவாய்
கார்மேக மேனியனே கரைந்திட என்விணைகள்
  காலடி பற்றினேன் கனிந்தருள் எந்தனுக்கே!

கந்தன் கழலடி



கைஅணைத்த கருநீலமயில் கந்தன்முகம் நோக்க
  கைவழியே வருகின்ற கனகவேல் தோள்தாங்க
கைவிரல்கள் ஐந்திணைந்து காக்கின்ற அபயம்தர
  கழுத்தினில் உத்திராட்சம் கருத்தோடு ஒளிவீச
கைலைமலைத் திருநீறும் கமலமுகமதில் துலங்கிட
  கருணைவிழி கண்ணிரண்டு கனிவோடு பார்த்திருக்க
கைகுவித்த பக்தனுக்கு கார்முகில் குழலாட
  கார்த்திகேயன் துணைவரும் கழலடி பணிமனமே!

மலையப்பா!



புல்லாங்குழல் வழியே பொழிகின்ற அமுதகீதம்
  பொன்விரல் மீட்ட பொலிகின்ற கண்ணனே
எல்லாம் அறிந்தவனே எளிமையாகி நிற்பவனே
  எழில்மிகு மலையப்பா ஏனிந்த புதியகோலம்
முல்லை மலர்மாலை முத்தார நவமணிகள்
  மோகன உருவாகி முறுவலுடன் வடிவெடுத்தாய்
கால்மடித்து அழகாக காளையென வீற்றிருப்பாய்
  ககனத்தில் நல்வழியே காட்டிடுவாய் மனதுள்ளே

கனிந்து நீ அருள்வாயே!



பால்வண்ண ஆடைமாற்றி புதுநீலம் புனைந்தாயோ?
  பலவண்ண மயிலாட பாச அன்னமதை மறந்தாயோ
எல்லாம் அறிந்தவளே எழில்மிகு கலைவடிவே
  ஏந்திய வீணையை ஏன் அணைத்து மீட்டுகின்றாய்
பல்பொருள் ஏட்டினை பாசமுடன் எடுத்துவந்தாய்?
  பக்தன் எனக்கும் பாடம் புகட்ட வந்தனையோ
கல்விக்கு அதிபதியே காலம்கடந்து நிற்கின்றேன்
  கண்களில் அறிவினை கனிந்து நீ அருள்வாயே!

ராம சங்கீர்த்தனம்



நெஞ்சினைப் பிளந்துள்ளே நிலைபெற்ற
  நாயகன் நாயகியை காட்டிய மாருதியே
கொஞ்சும் தாளக்கட்டை கையினில் ஏந்தி
  கீர்த்தனமாய் ராமஜெயம் பாடும் அனுமனே
தஞ்சம் அடைந்தவரை தாயாகக் காத்திட
  தயங்காமல் வருகின்ற ஆஞ்சநேயனே
நெஞ்சுருகி ராமசங்கீத்தனம் ஒலிக்குமிடமெலாம்
  நெகிழ்ந்து கேட்டுஉருகும் சிரஞ்சீவியே
பஞ்சசெனப் பறக்கும் பிறவித் துயரெலாம்
  பக்தியோடு உன்னைச் சரணடைந்திடவே!

புதன், 15 ஏப்ரல், 2015

வேங்கடவா அழைப்பாயே!



திருமண்ணால் கண்மறைத்து திருமலையில் நின்றிருக்கும்
  திருப்பதி பெருமானே திருகோவிந்த ராஜனே
வரும் பக்தர்கள் விணையெலாம் தீர்த்திடுவாய்
  வரதனாய் ஏழுமலையில் வராகமாய் நிற்பவனே
கரவறையில் கணநேரக் காட்சியில் கரைத்திடுவாய்
  கருமேனித் திருமகனே கலியுக தெய்வமே
விரும்பிவந்து உனைக்காண விரும்பினாலும் நீ அழைக்காமல்
  வெறும்முயற்சி பலனில்லை வேங்கடவா எனை அழைப்பாயோ!

வெற்றிவேல்



சரவண பவனே செந்தூரின் சண்முகனே
  சூலத்தான் திருமகனே சூரனை வென்றவனே
அரவம் மிதித்து ஆடுகின்ற மயிலாக்கி
  அழகிய கொடியில் அகவும் சேவலாக்கி
பரவும் கடலருகே பரம்பொருளாகி நிற்பவனே
  படையும் திருவேலும் பாங்குடன் தண்டமும்
கரம்தொட்டு உமா தேவி கொஞ்சும் கார்த்திகேயனே
  குறமகள் வள்ளியோடு குலமகள் தேவயானையோடு
விரதசஷ்டி நாயகனே விரும்பிவரும் அடியார்க்கு

  வரம்தந்து காத்திடும் வெற்றிவேல் முருகனே!

மலைமகள் துர்கா



பிடரியுடன் சிம்மம் பின்புறம் வாகனமாக
  பட்டான எண்கரங்கள் பல்வேறு ஆயுதம்தாங்க
குடத்தோடு பொற்கலசம் குவிக்கும் அபயகரம்
  குங்கும வண்ணஆடை குலுங்கும் வளைக்கரங்கள்
வடம்தொட்ட தேர்என விளங்கும் பேரழகு
  வேல்விழிகள் கருணையோடு வீபூதிதிலகம் எழில்நெற்றி
தடம்காட்டும் தாயாகிய தரணீ ஆன்ம தவசூலி
  தாள்பணியும் எந்தனை தயைகாட்டி அருள்வாயே!

அலையரசி



இருகையில் செந்தாமரை இனிதாக வீற்றிருக்கும்
  இளம்சிவப்பு பட்டாடை எழிலுக்கு எழிலூட்டும்
ஒருகை பொன்மாரி ஒயாமல் பொழிந்திருக்கும்
  ஒளிவீசி மறுகை ஒப்பிலா அபயம்தரும்
கருமேகக் கூந்தல் களிப்போடு விரிந்தாடும்
  கனிவான கண்ணிரண்டு கருணை மழைபொழியும்
திருமால் மார்பினில் திருவாக வீற்றிருப்பவளே

  திருமகளே நின்பார்வை தாயாகி கனிந்தருளே!

கலைவாணி



கலையாகி நீ வருவாய்
  கைகளில் வீணை ஏந்திடுவாய்
விலையிலா கல்வி செல்வமதை
  விரும்பினால் நீ அருள்வாய்
மலையருவி அருகே வீற்றிருப்பாய்
  மயிலருகே ஆடிவர அமர்ந்திருப்பாய்
ஒலைச் சுவடி தாங்கி நிற்பாய்
  ஒதும் ஜபமாலை கொண்டிருப்பாய்
தலையான செல்வம் நீ அருளிட
  துலங்கும் இகபர வாழ்வுதானே!

திங்கள், 13 ஏப்ரல், 2015

வைஷ்ணவோ தேவி



வெம்புலி மீதமர்ந்து விழிகள் கருணைசிந்த
  வில்லோடு சூலமும் விளங்கு கதையோடு கட்கமும்
தும்பைவெண் சங்கமும் திகிரியெனச்சுழலும் சக்கரமும்
  தாமரை மலரும் தந்திடும் அபயமும் கொண்டு
செம்மை ஆடையிலே சிவந்தஎண் கரங்களோடு
  செந்தூரப் பொட்டும் செவ்வாயில் புன்னகையும்கூட
தம்முடியில் கீரிடமும் தவழும் பொன்னாரமும்மின்ன
  தளிர்பாதம் காட்டி தாங்கவந்த தேவியே
அம்மையே வைஷ்ணவி அழகிய ஜெயமாதா
  அலைகடல் நாயகியே அனைவரையும் காத்திட
இமயத்துப் பனியிலே இருந்து அருள்பவளே
  இன்று உன்னை சரணடைந்தோம் இனிஎன்றும்
                       எம்மை ஏற்றருள் வாயே!

முனீஸ்வரன்



தலைப் பாகையும் துள்ளிடும் சூலமும்
  தாங்கிய தண்டமும் சின் முத்திரையும்
மலையென கம்பீரமும் மருட்டும் மீசையும்
  முன்னெற்றியில் திருநீறும் குங்குமமும்
கலையாக உத்திராட்சமும் கண்களில் கருணையும்
  கால்களை மடித்து காலமெலாம் அமர்ந்து
சிலையாக இருந்து சீரோடு எமை காக்கும்
  சினமிகு முனீஸ்வரனே சிந்தையால் வணங்குவனே!

சரவணபவ



அந்த ஆறெழுத்து மந்திரம்
  அனைத்து வினைகளையும் மாற்றிடும்
கந்தன் தன்னோடு இணைந்தது
  காம குரோத முதலான ஆறுஉட்பகை
விந்தையான வேல்என அழித்திடும்
  விலையிலா மனச்சாந்தி ஆனந்தம்
தந்திடும் 'சரவணபவ' என்றாலே
  தவமேதும் தேவையிலை தரணியிலே!

ஸ்ரீ ஐயப்பன்



எந்தன் வினையெல்லாம் எங்கோ விரட்டிட
  எழுகின்ற பிறைநிலவே எந்தன் ஐயப்பா
தந்தையாக அரனும் தாயாக ஹரியும் செய்
  தவமாக தரணியில் வந்தெழுந்த சுதனே
சொந்தமாக பொன்னம்பல மேட்டினில்
  சுடராக எழுகின்ற மகர சோதியே
பந்தபாசம் நீக்கி நின் பாதங்கள் சரணடைய
  பம்பையில் ஆடும் பாலனே பரிவோடு என்னை ஏற்றருள்க!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டு வாழ்த்துக்கள்!



சித்திரையின் அற்புதம் செவ்வாழை மாபலா
  சீரான முக்கனிகள் சொல்லும் நாட்டுவளம்
முத்தான புத்தாண்டு "மன்மத" பெயர்கொண்டு
  முன்வரும் ஒளிவீசி முன்னோர்கள் வகுத்தபடி
சத்தான உணவுகள் சமைத்தலில் பலவகைகள்
  சொல்லில் அடங்கா சுவைகூட்டும் காய்கறிகள்
அத்தனையும் எடுத்து அழகாக அலங்கரித்து
  அனைவரும் ஒன்றுகூடி ஆடிமகிழும் புத்தாண்டு

பூத்திடும் புதுமைகள் பொலிவுடன் தோன்றிடும்
  படைத்திட துடிக்கும் பறபறக்கும் இளையவர்கள்
நித்தம் வழிகாட்டும் நீண்டஅனுபவ முதியோர்கள்
  நீக்கிடும் பழமைகளை நாடும் புதியவைகளை
சித்தமதில் கொண்டிடுக சீர்பெறும் நாட்டினை
  சின்னஞ் சிறுபணியும் செலுத்தும் நல்வழியே
கொத்தாக மலர்வோம் குணத்தால் பெருகுவோம்
  கோடிகோடி நன்மைகள் கூட்டிவரும் பத்தாண்டே!
அனைவருக்கும் மன்மதவருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சனி, 11 ஏப்ரல், 2015

இளங்கன்றே



கன்றோடு விளையாடும் கருநீல மணியே
  கலையான தலைமுடியில் கண்கவரும் மயிலிறகே
ஒன்றாக இணைந்து ஒளிவிடும் பொற்கிரீடமே
  ஒய்யார நெற்றியில் ஒளிர்கின்ற திலகமே
புன்னகை பூத்திருக்கும் புதுமலர் இதழ்களே
  பொலிகின்ற முகமதில் பூரிக்கும் விழிகளே
சின்னக் குழந்தையாகி சிரித்திடும் கண்ணனே
  சீரான அஷ்டமியில் சிந்தையில் வந்தருள்க!

ராகு பகவான்



கருமை நிறமும் கருநாகக் குடையும்
  கோமேதக அணியும் கோலநீல ஆடையும்
உருமும் சிம்மமும் உயர்வான வாகனமாய்
  உளுந்தின் உள்ளிருந்து உயர்மந்தாரை மலரணிந்து
விரும்பும் நட்பாக விளங்குகன்னி மிதுனதுலாம்
  வளமைதரும் பசுவினம் வாழ்விக்கும் அதிதேவதை
இருபுறமும் தேவியர் இருந்து அருள்புரிய
  இடர்நீக்கி இன்னருள்தரும் ராகுவை பணிவோமே!

பாலகுருவே பாலகுமாரா



பால்வடியும் முகமும் பளிச்சிடும் வெண்ணீரும்
  பாங்கான சந்தணமும் பகட்டான குங்குமமும்
சேல்போன்ற விழிகளும் செவ்வாயில் புன்னகையும்
  செவிகளில் சிறுவளையமும் சேவிக்கும் கரங்களும்
வேல்சுமந்த தோளும் விரிகுழலும் அசைந்தாட
  விளங்கும் உத்திராட்சம் வியக்கும் அணியாக
மாலவன் மருகனே மலைமகள் புதல்வனே
  முதல்வனுக்கு பொருளுரைத்த புண்ணியனே வந்தருள்க!

வலம்புரி விநாயகனே



வலம்புரி விநாயகனே வரம்ளிக்கும் பெருமானே
  விரும்பிய இடமெலாம் வீற்றிருக்கும் வேழமே
மூலபலம் கொண்டு மூர்க்கரை அழித்தவனே
  மோகத்தை வென்றவனே மூஷிக வாகனனே
கோலமிகு அங்குசமும் கொழுக்கட்டையும் ஏந்திடுவாய்
  கோவிலாக எங்குமே குடியிருக்கும் முதல்வனே
சீலமிகு குணத்தோனே சிறப்பான வடிவோனே
  சிந்தை தெளிவுபெற சிறியவளை ஆட்கொள்வாயே!

வியாழன், 9 ஏப்ரல், 2015

மலரடி சேர்ப்பாயே!



சிங்கத்தின் மேலமர்ந்த சிவசக்தி துர்கையே
  சீறிவந்து தீமையை சிதறடிக்கும் தேவியே
அங்கமதில் ஒருபாதியாய் அமைந்திருக்கும் உமையே
  அவனியில் ஆணவத்தை அழித்திடும் அம்மையே
எங்கும் ஒளிவீசும் எழிலான சூலமோடு
  எட்டுக் கைகளில் எழும்பும் ஆயுதங்கள்
மங்கலமும் வாழ்வும் மெய்யான பக்தியும்
  மனதில் உருவாக்கி மலரடியில் சேரவைப்பாயே!

பொற்கொடியே!



பொற்குடம் தன்னோடு பூரணகலசம் தனைஅணைத்து
  பொன்மாரி பொழிகின்ற பொற்கொடியே திருமகளே
நற்கடல் கடைந்திட நல்அமுதோடு வந்தவளே
  நாரணன் திருமார்பில் நாளெல்லாம் இருப்பவளே
பாற்கடல் பரந்தாமன் பாதம்பற்றும் பொன்மகளே
  பொற்கரங்கள் இரண்டினில் புதுக்கமலம் ஏந்தியே
பொற்றாமரை தனிலமர்ந்து புதுச்செல்வம் தருபவளே
  புத்தாண்டில் எம்இல்லம் பொலிந்திட வரமருள்க!

பாவையின் தூயமொழி



அதிகாலை பாவையாட ஆன்மா சுத்தமாகும்
  ஆணவம் கன்மம் அதனோடு மாயைஎன
மிதிக்கின்ற மும்மலம் மயங்கும் இருளாகி
  மனதை உழலும் இருட்டாகி வைத்திட
துதித்து நீராடிட தூயஉடல் ஒளிவீசும்
  தூயமையான மனதினை துயர்எதும் தொடராது
பதித்து பரமனை பாடிக் கொண்டாடிட

  பாவையின் தூயமொழி புதுமார்கழி தரும்மொழி

வணக்கம் வானரோத்மனே!



வணக்கம் நற்குணம் வரையின்றி கொண்டவரே
  வணக்கம் வலிமை வஜ்ரமெனக் கண்டவரே
வணக்கம் வானில் வலம்வரும் சூரியனே
  வணக்கம் வீசும் வாயுவின் புத்திரனே
வணக்கம் தீமைகளை வாழ்வில் களைபவரே
  வணக்கம் கருணையை வாரிவழங்கும் மூர்த்தியே
வணக்கம் வானுலகில் வாழும் சிரஞ்சீவியே
  வணக்கம் மலரடி வணங்குகிறேன் போற்றி போற்றி!

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பாலகணபதி



ஆலிங்கனம் செய்து அகமகிழும் பாலகனே
  அகக்கையில் விளக்கேற்றி ஆராதிக்கும் குணசீலனே
பூலிங்கம் வடிவாகிய பூதலத்தின் நாயகனே
  பூமடந்தை உமையை புவிகாக்கும் தேவியை
சீலமுடன் பணிந்து சிறுநடையால் சுற்றிவந்து
  சிந்தையில் பெற்றோரே சிறப்பான உலகமேன
காலத்தால் விளக்கி கனிபெற்ற விநாயகனே
  குழ்ந்தை வடிவினில் குன்றெனநிறை அருள்வாயே!

பாலகுமாரா!



ஆறு முழுமதிகள் முகமாக மலர்ந்திட
  அழகிய பன்னிரண்டு விழிமலர்கள் ஒளிவீச
மருவிலா ரத்தின குண்டலங்கள் ஆடும்
  முன்செவிகள் ஈறாறு முன்னோக்க
திருவான திருக்கரங்கள் பன்னிரண்டும்
  தகைவான தாமரைமலராக மலர்ந்துவர
அருவியென முப்புரிநூல் பவளமேனியில் ஒடிவர
  ஆடையும் அணிகலனும் அரைஞான் மணிகளும்
பெருவினை அகற்றும் பாதகமலங்கள் சரசரக்க
  பேரழகாய் உருவாகி வரும் பாலகுமாரா
ஒருசொல் நானறியேன் உன்னழகை பாடிடவே
  ஒதும் மறைபொருளே ஒடிவந்து காப்பாயே! 

தினமும் விளக்கேற்று



திரி எனும் பாசம் பிணைத்திடும்
  தேடிய செல்வம், உறவு எனும் கயிறு கட்டிடும்
எரிந்திட ஊற்றும் எண்ணெய் இயங்கும்நட்பு
  என்றும் மனிதவாழ்வில் பற்றும் பிசுக்கு
விரிகின்ற சோதியாய் விளங்கிடும் நெருப்பு
  விரைந்து திரியும் எண்ணையும் கரையும் பாங்கு
கரியாகிவிடும் பந்தமும் பாசமும் நீங்கிட
  கடவுள் எனும் ஞானசோதியில் கலந்து மகிழ்வோமே!

ஸ்ரீ பகளாமுகி தேவி



பொன்னிற மேனியும் பொலியும் நெற்றியில்
  பூரிக்கும் திருநீறும் செந்திலகமும்
மின்னிடும் மகுடமும் மிளிரும் பிறைநிலவும்
  மாந்தளிர் அங்கமதில் மல்லிகை மாலையும்
சென்னிய பாசமும் சிலிர்க்கும் கட்கமும்
  செந்நிறக் கரங்களில் செந்தாமரை மலர்களும்
தன்னிகரிலா தங்கவண்ண ஆடைஅணியும்
  தகைவான தாமரைப் பாதங்களும் என்
சென்னிதனில் வைத்தேன் சீர்மிகு பகளாமுகிதேவி
  சூரியமங்கலம் வாழ்அரசி சீரிய வரமருளே!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

என்ன வேண்டும் எனக்கு?



1. என்ன வேண்டும் எனக்கு ஏனறியேன்?
    எடுத்தியம்ப மொழி என்னுள்ளே இல்லையா?
  முன்னே விளக்கேற்றி முதல்வன் முன்நின்று
    முன்னூறு விருப்பங்கள் முடித்துவையென வேண்டுகிறேன்!
  கனன்று நெஞ்சம் கனலாகித் தகிக்க
    கண்ணீர் விடுகின்றேன் கதறி அழுகின்றேன்
  மென்மையான சந்தணம் மணக்கும் குங்குமம்
    முகத்தில் திருநீறென மூன்றுபொட்டு வைக்கின்றேன்

2. புன்னகைக்கும் புதுப்பூவை படம்தோறும் சூட்டிவைத்து
    பழக்கத்தின் பயிற்சி பலதெய்வப் பாடல்கள்
  பின்னேவாய் ஒலிக்கும் பிறழாமல்தினம் தொடரும்
    பெற்றஉற்ற செல்வங்களுக்கு பார்த்துநினைத்து வேண்டுவேன்
  சின்னதும் பெரிதுமாய் சீரான வரங்கள்
    சிறுசண்டை போடுவேன் சினந்து ஏசுவேன்
  முன்னேகொடுத்து வைத்தவள்என முன்னின்று கேள்விகேட்பேன்!
    மெளனியாய் மண்டியிட்டு முடித்துவைஎன மிரட்டுவேன்

3. நான்வேண்டுவன நடந்திட நாளும் குறித்திடுவேன்
    நிறைவேற வழிமுறைகள் நல்திட்டமும் தந்திடுவேன்
  என்னுள் எழுந்தவை என்முன் நிறைவேறுதலை
    எழுச்சியுடன் கண்டிடஎன் ஆயுளையும் முடிவுசெய்வேன்
  தன்னந் தனிமையில் தயைஎனபிறரை நாடாமல்
    தன்கையே உதவியாக தரணியில் வாழவேண்டும்
  என்னால் யாருக்கும் எண்ணத்தால் உடல்பொருளால்
    எத்தகைய தொல்லையின்றி என்னை ஏற்றிடுஎன்பேன்

4. மனமும் பேதலித்து மயங்கிடும் பிதற்றலென
    மோகனப் புன்னகையில் மோகினிபாலன் அமர்ந்திருப்பான்
  தினமும் புலம்பவிட்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பான்
    தாமரைஇலை நீராக தத்தளிக்கும் பேதைமனம்
  சொன்னதும் சொல்லாததும் சபரிசோதி தானறிவான்
    சென்றுவந்த பாதையில் சேர்ந்துவந்த தோழனவன்
  என்ன எனக்கு வேண்டும் எப்போதுதரவேண்டும் என்றறிவான்
    எளிமையாக சரணடை எங்கும் நிறைந்து காத்தருள்வான்!

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மீண்டும் வசந்தம்?



1. காயந்த கிளைகள் கருப்பு வளைவுகள்
    கண்ணில் ஒர்இலையும் காட்சி தரவில்லை
  சாயும் மாலை செவ்வண்ண மேகம்
    சீரான ஒவியமாய் சருகான மரம்
  ஒய்வான பறவைகள் ஒரிருகரும் காகங்கள்
    ஒய்யாராமாய் உச்சியில் ஒலிஎழுப்பும் சத்தம்
  காயும் கனியும் கரும்பச்சை நிறமுமாய்
    கலகலவென அசைந்து காற்றிலாடிய மரமே!

2. இலை யாவும் இன்றுநீங்கி அந்திவான்
    இருட்டில் ஒவியமாய் இருக்கின்ற மரமே
  தலையான வாழ்வில் துள்ளிய மனம்
    தான்பெற்ற செல்வம் தனைநாடும் சுற்றம்
  அலைஒயா கடலென ஆர்ப்பரித்த வாழ்வு
    அகன்று சென்றன அனைத்தும் இன்று
  சிலையாகிய தனிமை சிந்தையில் தேக்கம்
    சிறுகிளை துளிர்க்குமா? சிறப்புகள் தொடருமா? 

மகிழ்ச்சி



மகிழ்ச்சி ஊற்றினை மாந்தர் தேடியே
  மாநிலம் எங்குமே மயங்கி அலையும்
மகிழ்ச்சி அடைய மனமது துணிந்து
  மாறான செயலையும் மனமுவந்து செய்திடும்
மகிழ்ச்சிதனை அடைந்தாலும் மனமது அடங்காது
  மயங்கும் போராடிப்பெற்ற மகிழ்ச்சியில் அதிருப்தி
மகிழ்ச்சியை மேலும் மனமது வேண்டும்
  மாகடலின் ஒயாத மாஅலைகள் போலவே
மகிழ்ச்சியின் நிறைவை மாற்றுஇடம் தனில்தேடும்
  மகிழ்ச்சி வேறிடம் மறைந்து இல்லையே
மகிழ்ச்சி பிறரை மகிழ்விக்க வளரும்
  மகிழ்ந்தவர் முகத்தின் மலர்ச்சியில் தோன்றும்
மகிழ்ச்சியை உன்உள் மனதினில் தேடு!
  மகிழ்ச்சி ஊற்று மளமளவெனப் பெருகும்
மகிழ்ச்சி எங்கும் மலர்ந்திடும் மலர்
  மகிழ்வோடு அதனை மாலையாக்கி சூடு!

புதன், 1 ஏப்ரல், 2015

உத்தரத்தின் நாயகனே!



உத்தமனாய் உலகினில் உத்தரத்தில் உதித்தவனே
  உண்மையின் உருவான உயர்வானின் சோதியே
வித்தகனே வேதப்பொருளே விழிகளில் வாழ்பவனே
  வேகமான பம்பையில் விளைந்திட்ட அமுதமே
புத்திரனாய் பாலகனாய் பந்தளம் நிறைந்தவனே
  பக்தருக்கு பலவடிவில் பரிவுதரும் பெரியோனே
புத்தம்புது அலையென புரண்டுஒன்றன் பின்ஒன்றாக
  புரட்டிடும் சலனங்கள் பாவத்தின் அறுவடையோ

மத்தால் கடைகின்ற மண்சட்டித் தயிரானேன்
  மாதவம் புரிபவனே மனஅமைதி தருவாயே!
நித்தம்உனை நிணைந்து நெஞ்சுருகி நிற்கின்றேன்
  நீயேகதியென நின்பாதமதில் நான்சரண் புகுந்தேன்
அத்தனையும் உன்னருள் அறிவேன் ஐயப்பா
  அன்பின் உணர்வுகளால் அசதிஉடற் சோர்வால்
இத்திரணியில் பொருளால் இனியவர் யாருக்கும்
  இனியதொல்லை ஆகாதுஎனை இறுதிவரை வாழவிடு!
பூத்திட்ட மலர்போல உன் பாதமதில் சேர்த்துவிடு!
  புவியில் வேண்டும்வரம் புண்ணியனே தந்துவிடு!

வெண்ணை உண்டவனே!



வெண்ணைத்தாழி உருட்டி விளையாடும் கோபாலா
  விண்ணகர வேந்தனே வேய்ங்குழல் கீதமே
கண்ணை உருட்டி கருத்தில் நுழைகின்றாய்
  கானத்தின் மோனத்தில் கனிந்துருக வைக்கின்றாய்
விண்மேக வண்ணனே வாயினில் வெண்ணையோடு
  வளைந்தாடும் குழலில் வண்ணமயில் இறகோடு
கன்னங்கள் சிவந்திட கனிவாயருகே கைசெல்ல
  கருநீல மேனியனே கால்கள் மண்டியிட்டு

மண்மேல் மழலையாய் மயக்கும் மாதவா
  மாதவம் செய்திட்ட மாதவள் யசோதை
கண்முன் களிநடனம் காணவைத்த மாமணியே
  கோகுலம் வாழவந்த கோமகனே குளிர்நிலவே
எண்ணங்கள் எதேதோ என்னுள்ளே எழவைத்து
  எத்தனைநாள் பார்த்திருப்பாய் எப்போது நீவருவாய்
மண்ணை உண்டு மாயங்கள் காட்டிநின்றாய்
  மனதின் அமைதிக்கு மாற்றங்கள் தாராயோ?